19.8 C
New York
Wednesday, April 1, 2026
spot_img

விடுதலைப் புலிகள் போல மிரட்டும் யானைகளால் தூக்கம் இல்லை- புலம்பிய முன்னாள் அமைச்சர்.

விடுதலைப் புலிகள் போன்று காட்டு யானைகள் நடந்து கொள்வதனால்  இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை,வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை  என  முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரான, அரச தரப்பு எம்.பி விமலவீர திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளினால்  பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.காட்டு யானைகளினால்  வருடாந்தம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றன.

மனித உயிர்கள் பல இழக்கப்படுகின்றன யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும் போது டொலர்களில் நிவாரணம் பெறும் தரப்பினர்  நீதிமன்றத்தை நாடி  முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகளுக்கு தடையுத்தரவை பெற்றுக் கொள்கிறார்கள்.

யானைகளுக்கு  குழிகள் வெட்டும் திட்டத்தை நான் ஆரம்பித்தேன்.யானைகளுக்கு ஆதரவாக தடையுத்தரவு பெறும் தரப்பினரது வீடுகளை யானைகள் தாக்குவதில்லை.

வழக்கு தாக்கல் செய்பவர்களின் வீடுகளையும் யானைகள் தாக்குவதில்லை.அப்பாவி மக்களின் வீடுகளை தான் யானைகள் தாக்குகின்றன.

இறுதியில் யானைகளும் உயிரிழக்கின்றன.மனிதர்களும் உயிரிழக்கிறார்கள்.இது  தேசிய பிரச்சினை

காட்டு யானைகள் விடுதலைப்புலிகள் போன்று நடந்து கொள்கின்றன இதனால் பிரதேசவாசிகள் தமது  கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை, வீதியில் செல்ல முடியவில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு கூட செல்ல முடியவில்லை. யானைகள் பொதுமக்களை அடித்துக் கொல்கின்றன

விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டுமானால்  யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் இதற்கு  சிறந்த திட்டமில்லை  என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். 

Related Articles

Latest Articles