திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை கடை உரிமையாளரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிவான், உரிமையாளரிற்கு 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் உணவகத்தில் திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல் வைத்து மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரினால் குறித்த உணவகம் நேற்று சீல் வைத்து மூடப்பட்டது.