வாட்டிக்கன்: கத்தோலிக்க தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை தவிர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி நிகழ்ச்சிகளில் பேசுவதை போப் தவிர்த்து வருகிறார். 86 வயதாகும் போப் பிரான்சிஸ் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அவரது குடல் சுருங்கியதால் அதன் முனையில் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 33 செ.மீ அளவில் குடல் வெட்டி எடுக்கப்பட்டது. இதனையடுத்து நல்ல ஆரோக்யத்தோடு இருந்து போப், கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.