20.3 C
New York
Saturday, September 21, 2024
spot_img

தனிப் பெரும்பான்மையை இழந்தார் மோடி – கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

பிந்திய நிலவரங்களின் படி, பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும்   காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தின்  543 தொகுதிகளில், அறுதிப் பெரும்பான்மைக்கு  272 இடங்கள் தேவை என்ற போது, பாஜக கூட்டணியாகவே, 2093 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

241 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளதால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக்கு உத்தரப்பிரதேசம்,  மகாராஷ்டிரா  போன்ற மாநிலங்களில் மோசமான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில்  மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 45 தொகுதிகளில், இந்தியா கூட்டணியும் 34 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.

தமிழகத்தில் 40  தொகுதிகளிலுமே  திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 29 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் 18 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல மத்திய பிரதேசத்தில்  உள்ள 29 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் , குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில்,  24 தொகுதிகளிலும்,  ஒடிசாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 19 தொகுதிகளிலும் சட்டிஸ்கரில் மொத்தமுள்ள  11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி இம்முறை 293 தொகுதிகளில் மாத்திரம் முன்னிலை பெற்றிருக்கிறது.

கடந்த முறை 91 தொகுதிகளை கைப்பற்றி இருந்த காங்கிரஸ் கூட்டணி இம்முறை 233 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கின்றது.

வாரணாசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்திருந்த போதும் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார்.

பாஜகவை சேர்ந்த அமித் ஷா காந்திநகரிலும் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதேபோல அமெதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பின்னடைவு சந்தித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மோடி அரசாங்கத்தின் 6 அமைச்சர்கள் தோல்வி காணும் நிலையில் உள்ளனர்.

Related Articles

Latest Articles