வவுனியா வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் , கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காண்பித்து போராட்டத்தை நடத்தியிருந்தனர்.