பிரிட்டனின் மிகப்பிரபலமான, பிபிசி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் செவ் 2024 சமையல் போட்டியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட கால்நடை மருத்துவரான பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார்.
அவர், தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளின் உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ் போட்டியில் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்
பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர், தாயார் டார்க்கே வங்கியில் பணிபுரிகின்றார்.
“எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விடயத்தில் நான் அதிஸ்டசாலி.
எனது பெற்றோர் சமையல்திறன் மிக்கவர்கள். எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது. சில பொருட்களை சேர்க்க முடியாது, சில பொருட்களை சேர்க்க முடியும். சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும்.
நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளேன். ஐரோப்பிய உணவு வகைகளிலும் சேர்த்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரின் பிரதாபன், மற்றும் சகோதரனுடன், அவரது பெற்றோர் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இருந்து போர் காரணமாக புலம்பெயர்ந்து பிரிட்டனில் புகலிடம் தேடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.