கொழும்பு கொள்ளுப்பிட்டி- பித்தல சந்தியில் 2006ஆம் ஆண்டு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரான, பொன்னசாமி கார்த்திகேசு சிவாஜி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் அடங்கிய ஆவணம் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு மற்றும் கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், பதிவு புத்தகத்தில் சட்டப்படி ஒட்டியிருப்பது தெரியவந்தது. எனினும், அந்த வாக்குமூலத்தை ஆதாரமாக முன்வைக்க அரசுத் தரப்பு ஆயத்தமானபோது, மூல ஆவணம் பொலிஸ் காப்பகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
சமர்ப்பணங்களை முன்வைத்த கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பதிவுப் புத்தகங்கள் காலாவதியாகும்போது அவை அழிக்கப்படுவதாகவும், ஆனால் புத்தகம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்த குறிப்பு வெளியிடப்படுவதாகவும் இருப்பினும், புத்தகத்தின் அழிவு குறித்து அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.