கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் ழ என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ், ”கெளசல்யா ஆரம்பிக்கும் ‘ழ’ அழகு நிலையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். அழகு நிலையத்திற்கு முதல் முறையாக வருகிறேன். எனக்கு அழகு நிலையத்திற்கு செல்லும் பழக்கம் இல்லை. இப்போது ஆண்களும் நிறைய அழகு நிலையத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். கெளசல்யா ஆரம்பித்த முதல் அழகு நிலையத்திற்கு சூட்டிங்கில் இருந்ததால் வரமுடியவில்லை. இந்த அழகு நிலையம் மேன்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகிறேன். கெளசல்யா மிகவும் தைரியமான பெண்மணி. பெண் எப்படி துணிச்சலாகவும், சொந்த காலில் நிற்க வேண்டுமென்பதற்கு அவர் உதாரணமாக இருக்கிறார். பெரியாரிய அமைப்புகள் அவருக்கு பக்கபலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்