கட்டார் ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நடுவானில் திடீரென குலுங்கியதால், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கட்டார் ஏர்வேய்சின் QR 017 விமானம், டோஹாவில் இருந்து டப்ளினுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துருக்கி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது நடந்த இந்தச் சம்பவத்தினால், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும், ஆறு ஊழியர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த 12 பேருக்கும் விமானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், டப்ளின் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம், நடுவானில் குலுங்கியதால், ஒருவர் உயிரிழந்ததுடன், 71 பேர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது, விமானப் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.