ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதியோ, ஒற்றுமையோ தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சவால் விடும் வகையில் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள, சி.வி. விக்னேஸ்வரனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்த போதே, ஜனாதிபதி ரணில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சந்திப்புக் குறித்து தகவல் வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்,
“ஜனாதிபதி என்னை என்னை சுகம் விசாரிப்பதற்காகவே வந்தார். அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கான சந்திப்பாக அது அமையவில்லை.
இந்தச் சந்திப்பில்தமிழ் பொது வேட்பாளர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதும், அவரது அநேகமான கருத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும், நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவே பேசினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறீர்களா? அது சாத்தியப்படாது எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ரணில் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நான் சிரித்தவாறே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கூறினேன்.
அத்தோடு இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் அவரிடம் கூறினேன். இரண்டாம் மூன்றாம் வாக்கு வழங்கும் நடைமுறையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பொது வேட்பாளர் தெரிவை அதற்கான கட்டமைப்பினர் மேற்கொள்வார்கள் , அதன் தெரிவை பார்ப்போம் என்றும் அவர் கூறினார் என, தெரிவித்தார்.