-1.1 C
New York
Friday, January 16, 2026
spot_img

“நான் உயிரியல் முறையில் பிறந்த மனிதப் பிறவி அல்ல“ – மோடியின் சர்ச்சை கருத்து.

நான் மனிதப் பிறவி அல்ல; என்னை இந்த உலகிற்கு அனுப்பியதே பரமாத்மாதான் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், ‘நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்கள் ஆற்றலுக்கு என்ன காரணம்?’ என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ என் தாய் உயிருடன் இருக்கும் வரை தாய் வாயிலாகதான் தான் இந்த உலகுக்கு நான் வந்தேன் என நினைத்திருந்தேன். அவர் மரணத்துக்குப் பின் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். சிந்தனை வாயிலாக கிடைக்கும் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்; அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.

மற்றவர்கள் இதை விமர்சிக்கலாம்; அதற்கு எதிராக சொல்லலாம். அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேநேரம், என்னுடைய எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.

நான் ‘உயிரியல் முறையில் பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நான் மனிதப் பிறவி அல்ல என மோடி பேசியுள்ளது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

Related Articles

Latest Articles